இந்திய அணி விரும்பினால் பேட்ஸ்மேனாக மட்டும் களம் இறங்க தயாராக இருக்கிறேன் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் பார்த்தீவ் பட்டேல். 32 வயதாகும் இவர், 2002-ம் ஆண்டு தனது 17 வயதில் இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்காமில் நடைபெற்ற டெஸ்ட்டில் அறிமுகமானார்.
அதன்பின் அவரால் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. தற்போது கீப்பர் மற்றும் பேட்டிங்கில் தனது திறமையை வளர்த்துள்ளார். ஆனால் விக்கெட் கீப்பர் பணியில் சஹா கடும் சவாலாக உள்ளார்.
சஹா காயம் அடைந்ததால் சுமார் 6 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பிடித்தார். சஹா குணமடைந்ததும் பார்தீவ் பட்டேலுக்கு இடம் கிடைக்கவில்லை.
விக்கெட் கீப்பராக இல்லையென்றாலும், பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட அணி விரும்பினால் அதற்கு தயார் என்று பார்த்தீவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பார்த்தீவ் பட்டேல் மேலும் கூறுகையில் ‘‘இளம் வயதில் நீங்கள் பொதுவாக எதையும் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். எனக்கு 17 வயதாகும்போது அப்படித்தான் நிகழ்ந்தது. அப்போது இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற கனவு நனவானது. இவ்வளவு பெரிய வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து நான் உட்கார்ந்து யோசித்தது கிடையாது. அது எனக்கு நல்லநேரமாக அமைந்தது. அது என் வாழ்க்கையில் முக்கியமான தருணம்.
தற்போது என்னுடைய முதல் குறிக்கோள் என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். தொடரில் என்னுடைய அணி வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒவ்வொரு நாளும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
கிரிக்கெட் வீரர்களுக்கு சில கனவுகள் இருக்கும். அவற்றில் ஒன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது. மற்றொன்று ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என்பது. தற்போது ஐ.பி.எல். தொடரில் இடம்பிடிப்பது.
இந்திய அணி நிர்வாகம் என்னை எந்த இடத்தில் களம் இறக்க விரும்பினாலும், அந்த இடத்தில் களம் இறங்க தயாராக இருக்கிறேன். தொடக்க பேட்ஸ்மேன், மிடில் ஆர்டர், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன், கீப்பர் - தொடக்க பேட்ஸ்மேன் என எந்த இடமாக இருந்தாலும் சரி. சூழ்நிலைக்கு ஏற்றவகையில் என்னை மாற்றிக் கொள்ளக்கூடிய அனுபவம் பெற்றுள்ளேன். என்னுடைய நம்பிக்கை என்னை நல்ல இடத்தில் வைத்துக் கொள்ள உதவியது’’ என்றார்.
No comments:
Post a Comment